பிற நாடுகளுக்கு சொந்தமான நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கடந்த 70 ஆண்டுகளில் ஆக்கிரமிக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா தரப்பில் திங்கட்கிழமை குற்றஞ்சாட்டப்பட்டது.
கால்வன் பள்ளத்தாக்கை தொடர்ந்து பாங்கோங் ஏரியையும் ஆக்கிரமிக்க சீனா முயற்சித்ததாகவும் எனினும் தமது இராணுவத்தினர் அதனை முறியடித்துவிட்டதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பீஜிங்கில் நேற்று செய்தியாளா்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். கடந்த 70 ஆண்டுகளில் பிற நாடுகளின் ஒரு அங்குலத்தை கூட சீனா இதுவரை ஆக்கிரமித்ததே இல்லை என அவா் கூறினார்.
சீனா போரை தூண்டும் நடவடிக்கைகளிலோ மோதல்களிலோ ஒரு போதும் ஈடுபட்டதும் கிடையாது.
எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா இராணுவத்தினர் மதித்தே நடந்து வருகின்றனர். ஒருபோதும் சீன இராணுவத்தினர் எல்லை தாண்டியதே இல்லை.
சில நேரங்களில் தகவல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். இருதரப்பும் அமைதியையும் நல்லுறவையும் கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும். எல்லைகளில் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவா் கேட்டுக்கொண்டார்.
இந்திய எல்லையில் சீனா இராணுவத்தை குவித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியிடுகின்றன. இருநாட்டு மக்களும் உண்மைகளை உணர்ந்து அமைதியாக வாழவே விரும்புகின்றனர். இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
இந்தியா - சீனா இடையே பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக உதவும் ஹூவா சுனிங் தெரிவித்துள்ளார்.